கறுப்பு பணத்தை மீட்க வலியுறுத்தி ராம்தேவ் இன்று முதல் உண்ணாவிரதம்
புதுடெல்லி : வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி உள்ள கறுப்பு பணத்தை மீட்டு வர வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி யோகா குரு பாபா ராம்தேவ் டெல்லி ராம்லீலா மைதானத்தில் திட்டமிட்டபடி இன்று உண்ணாவிரதம் தொடங்குகிறார். அவரை சமாதானப்படுத்த மத்திய அமைச்சர்கள் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது.
‘நாட்டில் ஊழலை ஒழிக்க லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும்‘ என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தார். அவருக்கு நாடு முழுவதும் பலத்த ஆதரவு பெருகியது. இதையடுத்து, லோக்பால் மசோதா தயாரிக்க மத்திய அரசு குழு அமைத்தது. இதில் சமூக ஆர்வலர்களும் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில், வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி உள்ள கறுப்பு பணத்தை மீட்க வலியுறுத்தி யோகா குரு ராம்தேவ், டெல்லி ராம்லீலா மைதானத்தில் இன்று சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்குவதாக அறிவித்தார். கடந்த 1ம் தேதி டெல்லி வந்த அவரை மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, கபில்சிபல், பவன்குமார் பன்சால், சுபோத்காந்த் சகாய் ஆகியோர் விமான நிலையத்தில் சந்தித்து 2 மணி நேரம் பேச்சு நடத்தினர். ராம்தேவ் தனது முடிவில் உறுதியாக இருந்தார்.
பரபரப்பான சூழ்நிலையில், நேற்றுமுன்தினம் மாலை பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் காங்கிரஸ் உயர்மட்டக் குழுக் கூட்டம் நடந்தது. இதில் கட்சி தலைவர் சோனியா, மத்திய அமைச்சர்கள் பங்கேற்று ராம்தேவ் உண்ணாவிரதம் குறித்து ஆலோசனை நடத்தினர். இதற்கிடையில், ராம்தேவுக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதத்தில் பங்கேற்க ராம்லீலா மைதானத்தில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் குவிந்துள்ளனர்.
அவர்கள் மத்தியில் ராம்தேவ் நேற்று உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசுகையில், ‘என் உண்ணாவிரத போராட்டத்தில் அரசியல் உள்நோக்கம் இல்லை. எந்த கட்சிக்கு எதிராகவும் உண்ணாவிரதம் நடத்தவில்லை. இதற்கு எந்தக் கட்சியும் செலவு செய்யவில்லை. லட்சக்கணக்கான கோடி ரூபாய் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ளது. அந்த பணம் மக்களுடையது. அதை மத்திய அரசு மீட்டு வர வேண்டும்’ என்றார்.
அதன்பின் ஓட்டல் அறைக்கு திரும்பிய ராம்தேவை மத்திய அமைச்சர்கள் கபில்சிபல், சுபோத் காந்த் சகாய் ஆகியோர் சந்தித்து மீண்டும் சமரச பேச்சு நடத்தினர். இருதரப்புக்கும் 5 மணி நேரத்துக்கு மேல் நடந்த பேச்சு தோல்வியில் முடிந்தது. பின்னர் நிருபர்களை சந்தித்த ராம்தேவ், ‘‘மத்திய அரசு நடத்திய பேச்சில் உடன்பாடு ஏற்படவில்லை. எனவே, திட்டமிட்டபடி உண்ணாவிரதம் தொடங்குவேன்’’ என்றார்.
அமைச்சர் கபில்சிபல் கூறுகையில், ‘‘ராம்தேவுடன் நாங்கள் பல விஷயங்கள் குறித்து பேசினோம். அவர்களுக்கும் மகிழ்ச்சிதான். ஆனால், ஒரே நாளில் எல்லா பிரச்னைக்கும் முடிவு காண முடியாது’’ என்றார். ராம்தேவ் உண்ணாவிரதத்துக்கு சமூக ஆர்வலர் அன்னா ஹாசாரே, எதிர்க்கட்சி பா.ஜ.வும் ஆதரவளிக்க முன்வந்துள்ளதால் டெல்லியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
பிரதிபாவுடன் மன்மோகன் சந்திப்பு
ஜனாதிபதி பிரதிபா பாட்டீலை, பிரதமர் மன்மோகன் சிங் நேற்று மாலை சந்தித்து பேசினார். 40 நிமிடங்கள் நடந்த சந்திப்பின் போது, ராம்தேவின் உண்ணாவிரத போராட்டம், மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து பிரதிபாவிடம் மன்மோகன் எடுத்துரைத்தார். மேலும், சமீபத்தில் எத்தியோபியா, தான்சானியா நாடுகளுக்கு மேற்கொண்ட பயணம் குறித்தும், அந்த நாடுகளுடன் மேற்கொண்ட ஒப்பந்தங்கள் குறித்தும் மன்மோகன் விளக்கினார்.
No comments:
Post a Comment